வெள்ளி, 10 ஏப்ரல், 2009

காதல்-அறிமுகம்

அறிமுகமா !
காதலுக்கா !
வெளியே எங்கும் சொல்லாதீர்கள்
காதல்தான் அனைத்துமே
காதல்தான் ஆன்மா
காதல்தான் கடவுள்
காதல்தான் எங்கும் நீக்கமற நிறைந்த பொருள்
காதலை அறிந்துகொண்ட பினதான்
நான் மனிதன் என்ற உணர்வினைக் கற்றேன்
நீ இன்றி ஒரு அணுவும் இல்லை
அசைவும் இல்லை
நீதான் எல்லாமே
உன் நினைவே என்னை உத்வேகப்படுத்துகிறது
நீயே அருந்தும் அமுதம்
நீயே அட்சயப் பாத்திரம்
நீயே அனைத்திற்கும் முதல்
நீயே அனைத்திற்கும் எல்லை
நீதான் மனித இனத்தின் மறு உற்பத்திக்கு
ஆதாரமாகிறாய்
காதல் என்ற மொழி ஒன்றே போதும்
மானுடம் பிழைத்துக் கொள்ளும்
காதலுக்கு மறுபெயர் சூட்டினால்
அன்பு என்றும் அன்னை என்றும்
மாறுகிறது.
அன்பே என்று அணைக்கக் கன்னியும்
அம்மா என்று அழைக்க அன்னையும்
காதலின் கடவுள்கள்
நான் என்னை அறிந்து கொள்வது என்பது
காதலை அறிந்து கொள்வதிலிருந்துதான்
தொடங்குகிறது
எல்லாமே காதல் என்றக்
கொடியினை உயர்த்திப் பிடிப்போம் வாரீர் !


தனுஷ்

வியாழன், 9 ஏப்ரல், 2009

நட்பும் மழையும்

நீ என்று வருவாய் தெரியாது
உன் அன்பின் குளுமை இன்னும்
என் உதடுகளில் ஈரமாகவே உள்ளது.
உனக்கான காத்திருப்பு கவித்துவமானது
எல்லா நொடிகளிலுமே
உன் நினைவு
சுகந்தமாக என்னைச் சுற்றி வருகிறது.
நான் வாழ்வதின் அர்த்தம் நீ
எனக்காக எதுவும் இல்லை என்று
நினைக்கும் போதெல்லாம் நீ
இருப்பதை நினைக்கும் போது
வாழ்வின் மீதான பிடி இறுகிப்போகிறது.
அர்த்தமற்ற பயணம் தொடங்கிய இடத்திலேயே
என்றோ நின்று போனதை
காலங்கடந்த பின் நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவு மட்டும்தான் ஆறுதல்
பயணத்திற்கான தயாரிப்பே உன்னை
மையமாக்கித்தான்
என்று வருவாய் ஒரு மழை போல
குடைகளை தூக்கி எறிந்து விட்டு
வீதியில் உன்னில் நனைவதற்காக
காத்திருக்கிறேன்

தனுஷ்

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

நட்பில் ஊடல்

நட்பில் ஊடல்

அவளது நட்பில்
ஆனந்தம் இருந்தது
அவளது விசாலமான
அறிவும் தெளிவும்
சுதந்திரத்தைத் தந்திருந்தது
ஒரு வருடப் பழக்கத்தில்
ஒரே ஒரு முறைதான்
அவனை முத்தமிட்டிருக்கிறாள்
முத்தமிட்ட அன்றொடு முடிந்து
போனது நட்பு
இன்றைக்கும் அவனைப் பார்த்தால்
புன்னகைக்கிறாள்
அவனுக்குத்தான் கடன்கள்
அடிக்கடி ஞாபகம் வந்துத்
தொலைகிறது
அவனே கேட்டு விட்டான்
நீ முன்பு மாதிரி இல்லை
அதற்கு அவள் சொன்னாள்
ஊடல் கூடாதா
இந்த முறை உதட்டில்
விரலை வைத்து அழுத்தினாள்
வெகு தூரம் போய் விட்டாள்
இனி கடன்காரி அவள்
வராமல் இருந்தாலும் பரவாயில்லை
என்று நினைக்கத் தொடங்கினான்

தனுஷ்

செவ்வாய், 31 மார்ச், 2009

மனம் வேண்டும்

கவிதை வேண்டும் கடவுள் வேண்டும்
சாதல் இல்லா வாழ்வும் வேண்டும்
காலம் முழுதும் காதல் வேண்டும்

மனம்கவர் மங்கை அருகே வேண்டும்
மாலை யானால் அளவாய் மதுவும் வேண்டும்
கண்மூடும் கணப் பொழுதில் தூக்கம் வேண்டும்
பற்றும் வேண்டும் பாசம் வேண்டும்
பற்றற்று வாழப் பழக வேண்டும்
பந்த பாசம் எல்லாம் ஓர்நிறை
பாசம் இழந்தால் பந்தம் போனால்
மயிரது உதிர்ந்த மனமது கொண்டு
வாழ்வில் இன்பம் காணவும் வேண்டும்
உயிரிகள் எல்லாம் நமதெனக் காணும்
அன்பினில் தோய்ந்திடும் இன்பம் வேண்டும்

தனுஷ்

யாருக்கும் வெட்கமில்லை !

எதைத் தெரிந்தும் எதுவும் ஆக போவதிலை.
தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாலும்
அவரவர் போக்கு அவரவர் வசதி
என்றோ விலை போக பழகிவிட்டார்கள்.
மேலே இருப்பவர்களுக்கு கோடிகள் எல்லை
இவர்களுக்கு பிரியாணி, கால் பாட்டில் மது எல்லை.
இதில் யாருக்கும் வெட்கமில்லை.

தனுஷ்.

வெள்ளி, 23 ஜனவரி, 2009

இதை எழுதியிருக்க வேண்டாம்

நான் கற்களை வீசி கடலில் சலனத்தை ஏற்படுத்த
நினைக்கும் போதெல்லாம் கவிதை எழுதுகிறேன்
எந்தக் காரணமும் இன்றி அன்றொருவன் இரயில்
அடித்துத் துவைத்தானே அவனை நினைக்கும் போதெல்லாம்
கவிதைகளை எழுதி எழுதிக் கிழிக்கும் அவலம் நேர்கிறது
எனது அழுகைக்கான காரணத்தை அறிய முற்படும் போதெலாம்
அவை கவிதைகளாகவே உருக்கொள்கின்றது
துக்கங்களைச் சுமப்பது என்பது கவிதைகளாக
உருக்கொண்டு ஆறுதல் அளிக்கிறது
எல்லோரும் அவரவர் போக்கில்
என்மீது மோதும் உணர்வின்றி நகர்கிறார்கள்
அவர்கள் இடித்துச்செல்லும் தடம் யாவும்
காயங்களாய் நிலைத்துச் சீழ் வடிக்கும்
வலி தாளாது நான் அழுகையை வெளிக்கொணராத
பொழுதுகளில் தீவிரமாக கவிதை வெளிப்படுகிறது
கவிதை துக்கத்தின் வடிகால் ஆறுதல்
அரவணைத்துத் தேம்பலை மடிபுதைத்து
அழுவதற்குள் நான் இழைஇழையாய்
வெற்றுவெளியில் கரைந்து மறைந்தும்
போகிறேன்

தனுஷ்

வெள்ளி, 16 ஜனவரி, 2009

கவிதையும் வாழ்க்கையும்

கவிதைக்கான மொழி என்பதில் எங்கிருந்து தொடங்குவது. ஒவ்வொரு கவிதையும் அதற்கான சொற்களை எங்கிருந்து எடுத்துக்கொள்கிறது. வெறும் சொற்களின் ஆரவாரம் மட்டும் போதுமா கவிதைக்கு. இது போன்ற கேள்விகள் இல்லாமல் கவிதை எழுதுவது என்பது மிகுந்த அபத்தமாகவே முடிந்திருக்கிறது. கவிதைக்கான மொழி என்பதை எப்படி புரிந்து கொள்வது, அது கவிஞனின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் ஒரு லயம். அந்த லயம் சொற்களால் வரையப்படுகிறது. எல்லாச் சொற்களுமே கவிதைக்கான சொற்கள்தாம். கவிதைக்கென தனியே சொற்கள் இல்லை. ஆனால் சொற்களின் அர்த்தம் இங்கே கவிஞனால் தீர்மானிக்கப்படுகிறது. முந்தையக் கவிதைகளின் வடிவத்தில் ஆளாளுக்கு எழுதி எழுதிச் சோர்வடைந்த பின்னர் கவிதைக்கென்ற தனிமவுசு இன்றைய சூழலில் செத்து விட்டது. அந்த மவுசை மீட்டெடுக்கும் கவிதைகள் மட்டுமே வாழும் என்பதை காலம் நமக்கு உணர்த்துகிறது. இன்று புத்தகக் கண்காட்சியில் உயிர்மை அரங்கில் மனுஷ்ய புத்திரனின் நான்கு கவிதைத்தொகுப்புகளை வாங்கினேன். வீட்டுக்குத் திரும்பும் போது இரயில் 'இடமும் இருப்பும்' கவிதைத்தொகுதியில் முதல் கவிதை 'நீலம்' படித்தேன். அந்த ஒரு கவிதை மட்டுமே போதும் யோசிக்க ஒரு மணி நேரத்திற்கு. கவிதை மொத்தம் பதினான்கு வரிகள்தான்.
வாழ்க்கையின் உச்சி, தேடல், அடைய வேண்டிய சிகரங்கள் இவைகளுக்காகவே எல்லா மனிதர்களும் பறந்து கொண்டிருக்கிறார்கள். கவிஞனால் வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. வீடு தாழிடப்பட்டிருக்கிறது. அவனுக்கும் ஆகாயத்தை நோக்கிப் பறக்க ஆசை. அந்த ஆகாயத்தின் நீலத்தில் கரைந்துவிட ஆசை. அதற்கான தயாரிப்பிற்கு தன்னை சுயபரிசோதனை செய்கிறான். கவிஞன் இலட்சியங்களால் வார்க்கப்பட்டவன். அதற்கென அவனுக்கு தனி பாதை தேவைப்படுகிறது. தனது சுயத்தயாரிப்பில் அவனுக்கு கர்வம் இருக்கிறது. இந்த கர்வம் அவனது இயல்பு. இத்தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டது போலவே இந்தக்கவிதை, மனம் கசங்கச்செய்யும் அந்தியின் துயரத்தோடு வெளிப்படுகிறது. கவிதையைப் படியுங்கள்.
நீலம்
ஆகாயத்தை
எட்டிப் பிடித்து விடலாமென்ற
பதற்றமான பறத்தல்களின்
கலவர ஒலிகளை
அமைதியாகக் கேட்டபடியே
தாழிடப்பட்ட இந்த அறையிலிருந்து
உருவாக்கிக் கொண்டிருகிறேன்
சிறிதளவு ஆகாய நீலத்தை
மலையேறும் குழுக்கள்
ஏராளமான சுவடுகளை உதிர்த்தபடி
கொடியேற்றித் திரும்பட்டும்
இன்றிரவுக்குள் வரைந்துவிட மாட்டேனா
என் பாதத்தை
அதன் துல்லியமான ரேகைகளுடன்.
மனுஷ்ய புத்திரன். (1994)
நல்ல கவிதைகளை அடையாளம் காணும் பயணம் தொடரும்.
தனுஷ்

புதன், 14 ஜனவரி, 2009

மெய்ப்பொருள் காண்பதறிவு

அன்பர்களே !



எளியோனாகிய நான் தங்களை வலைப்பூ மூலமாக சந்திப்பதில் பெரும் மகிழ்வெய்துகிறேன். மனதில் பட்டதை யாராலும் உடனே சொல்ல முடியுமா ! ஆயிரத்தெட்டு காரணங்களால் அவை வெளியே சொல்லப்படாமல், சொல்ல முடியாமல் உள்ளேயே புதைக்கப்படுகின்றன. அப்படிப் புதைக்கப்பட்டவை பெரும்பாலும் உண்மையைத் தேடுபவை. அத்தகுத் தேடலுக்கு நாம் நம்மை என்று தயாரிக்கப்போகிறோம் ?.



தனுஷ்